
கடந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் ஏனோ எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது. இந்தியாவில் நடந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். வான வேடிக்கைகள் நிறைந்த விறுவிறுப்பான போட்டிகள் எத்தனை.(சென்னை அணி நன்றாக விளையாடியது என் ரசனைக்கு காரணமோ தெரியவில்லை.)
ஒரு சில அணிகளை விட மற்ற எல்லா அணிகளும் நன்றாகத்தான் மோதின. ஷேன் வார்னேயின் அணி இறுதியில் நடத்திய திருவிழாவை டோனி மட்டுமல்ல யாருமே மறக்கமாட்டார்கள்.
அதே எதிர்பார்ப்புடன் ஆரம்பமான இம்முறை தொடர் ஆரம்பத்திலேயே தென் ஆபிரிக்காவில் ஆரம்பம் என்றவுடன் தன் களையில் முதல் படியை இழந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே. கிரிக்கெட் வெறியர்களை கொண்ட இந்தியா உட்பட ஆசிய நாட்டவரை இது பெரிதும் பாதித்தது என்னவோ உண்மையே. அதன் பின் ஒருவாறு ஆரம்பமாகிவிட்டது. (கடந்தமுறையை விட இம்முறை பல முன்னணி பிரபலங்கள் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.)

ஆரம்பத்திலேயே கடந்தமுறை இறுதிவரை முன்னேறிய சென்னை அணியினர் மும்பையிடம் தோற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கேள்விக்குறியாக்க தொடங்கினரென்றால் மறுபுறம் கடந்தமுறை உப்புசப்பு அணியாக இருந்த பெங்களூர் அணி சாம்பியன்ஸ் ராஜஸ்தானை விழுத்த மேலும் ஒரு எதிர்பார்ப்பில் அடி. இப்படியே போக கடந்தமுறை சொதப்போ சொதப்பென சொதப்பிய டெக்கான் அணி இம்முறை ஆரம்பம் முதலே பிளந்து கட்டத்தொடங்கியது. மும்பை மற்றும் டெல்லி அணிகளும் தங்களை பலமாக வெளிப்படுத்த கடந்தமுறை அசத்திய சென்னையும் ராஜஸ்தானும் நிமிரமுடியாமல் அடிவாங்கின.கொல்கத்தா அணியோ அடிவாங்கவே தான் வந்திருக்கின்றேன் என வந்தது போல் அடிமேல் அடி வாங்கி இன்று கடை நிலையில்.(ஷாருக்கானை மூட்டை கட்டி அனுப்பி வைத்த சாதனை அணி அது.)

இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் புச்சனன் செய்த மந்திர விளையாட்டுகள் கங்குலி என்னும் முதிர்ந்த சிங்கத்தை களங்கப்படுத்த மொத்த அணியே கரைசேரா கப்பலாகிவிட்டது.
கொஞ்சம் தலை நிமிர்ந்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 214/4 என விளாசி துவைத்தெடுத்தனர். இதுவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம்.(வேறு எந்த அணியும் இருநூறை தாண்டவில்லை கேட்டால் இருபதுக்கு இருபது போட்டியாம்.)

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை கிழட்டு சிங்கம் ஹய்டேன் 486 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் தொடர்ந்து அவர் சகா கில்கிறிஸ்ட் 329 இரண்டாமிடத்திலும்
AB de Villiers 366 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் ரைனா 322 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும்யுவராஜ் 314 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். தனிநபர் ஓட்டக்குவிப்பை பொறுத்தவரை
AB de Villiers 105 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் விளாசி முதல் இடத்திலும் ரைனா 98, ஹய்டேன் 89 ஓட்டங்களுடனும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

சிக்ஸர் விலாசுவதிலும் வயதான வீரர்கள் விடவில்லை. கில்கிறிஸ்ட் 21 சிக்ஸ்செர்கள், ஹய்டேன் 20 சிக்ஸ்செர்கள் என முதல் இரண்டு இடங்களையும் பிடிக்க டுவய்னே ஸ்மித், ரைனா, யுவராஜ் அவர்களை துரத்துகின்றனர். ஒரே போட்டியில் ஆறு சிக்ஸ்செர்கள் விளாசி
AB de Villiers, யுஸுப் பதான், ஹய்டேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பந்து வீச்சை பொறுத்தவரை இலங்கையின் சுனாமி மலிங்க இந்தியாவின் இருபதுக்கு இருபது ஸ்பெசலிஸ்ட் ஆர.பி.சிங் மற்றும் நெஹெரா ஆகியோர் பதினாறு விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்க அனில்கும்ப்ளே ஒரு போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகின்றார்.(எதி ராஜஸ்தான்)

இம்முறை ஐ.பி.எல்லில் எந்த விக்கெடடுக்குமான அதிகபட்ச இணைப்பாட்டமாக ராஜஸ்தான் அணியின் ஓஜா மற்றும் கிரகம் ஸ்மித் ஆகியோர் 135 ஓட்டங்களை குவிக்க கடந்தமுறை ஆரம்ப இணையாக அசத்திய டெல்லியின் ஷேவாக் கம்பீர் ஜோடி தடுமாறி வருகின்றது. ஜெயசூரியா மற்றும் சச்சின் ஜோடியும் சில போட்டிகளில் விருந்து வைக்க தவறவில்லை.(இந்த வயதிலும் அப்படி ஒரு ஆட்டம் எங்களையா அணியை விட்டு நீக்க சொல்லி சொன்னீர்கள் என கேட்பதுபோல்.)
இந்த பதிவை நான் எழுத யோசித்தபோது டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையிலான போட்டியில் தொடர்ந்து அசத்தி வந்த டெல்லி படுதோல்வி கண்டிருக்கின்றது. புள்ளிப்பட்டியலில் எந்த அணியும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைப்பதாக தெரியவில்லை. அத்துடன் பலமான அணிகளுடன் ஜெயிக்கும் பெரிய அணிகள் பலம் குன்ரியதென நினைக்கும் அணிகளிடம் சுருண்டு விடுகின்றன.(இதுக்கு பெயர்தான் விட்டுக்கொடுப்போ?)

கள நிலவரம் இப்படி இருக்க கனவு தேவதைகளின் ஆட்டம் ஒரு புறம் சூடேற்றுகின்றது. நல்ல காலம் இம்முறை அவர்களை ஆவது ஆடவிட்டது. இல்லாவிட்டால் டெஸ்ட் போட்டிகள் போல் நடைபெறும் சில போட்டிகளை பார்க்கபோகும் ரசிகர் நிலை என்னவோ?
எந்த அணியும் தொடர்ச்சியாக தன் பலத்தை நிரூபிக்கவில்லை அதேபோல் பல எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பல் ஆட்டம் ஆடுகின்றனர். சேவாக் துடுப்பாட்டத்தை மறந்து விட்டார். கம்பீர் தடுமாறுகின்றார். சனத்தோ சத்தற்றவர்போல வந்து போகின்றார்.. பீட்டேர்சன், பிளின்டோப் விளையாடுகின்ரார்களா தெரியவில்லை. முரளியிடம் பழைய விக்கெட் வேட்கை காணவே இல்லை. ஓரம் என்ன செய்கின்றாரோ?. தோனியின் தலைமை? சச்சின் ஏதோ இடைக்கிடை ஆடுகின்றார். ராவிட்டும் அப்படியே. மஹேல, சங்கக்கார மற்றும் யுவராஜ் பெரிதாக சோபிக்கவில்லை.டில்ஷான் தன் கடந்தகாலங்களில் மறந்த துடுப்பாட்டத்தை இப்போது சேர்த்து காட்டிக்கொண்டிருக்கின்றார்.

தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அணியை காப்பாற்றி விடுகின்றார். பிராவோ தன் பங்குக்கு கலக்கிக்கொடிருக்கின்றார். ஹர்பஜன் தன் பங்குக்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உதவி செய்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். யுஸுப் பதான் களம் இறங்கினாலே எதிரணிக்கும் கலக்கும் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் போனதும் மறுக்கமுடியா இழப்பே. ரோகித் ஷர்மா பந்துவீச்சில் கலக்குவதொடு அவ்வப்போது மறந்து போன துடுப்பாட்டத்தை நினைவுபடுத்திப்பார்க்கின்றார். உத்தப்பா நடந்து வந்து விளாசும் சிக்ஸ்செரை பார்த்து எத்தனை மாதங்களாகிவிட்டது?
எதிர்பார்க்காத எத்தனையோ இளம் வீரர்களும் சர்வதேச வீரர்களும் கொஞ்சம் தங்களை நிலை நிறுத்துகின்றார்கள். சில பிரபல வீரர்கள் களம் இறங்கவே இல்லை. ஏன்? என்ன நடக்கின்றது. கடந்தமுறை கலை கட்டிய திருவிழாவா இது? எதுவுமே தெரியாமல் பாதி கடந்து விட்டது. இனியாவது சூடு பிடிக்குமா? தெரியவில்லை.
1 கருத்துரைகள்:
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல...
- நம் குரல்
Post a Comment