
தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம் என்பன கொண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் வருவது இயற்கை தானே.
தான் பிறந்த தமிழினத்துக்காக குரல்கொடுத்தவரை கைது செய்ய போலீசார் பல முயற்சி எடுத்தும் பலனின்றி தானாகவே அவர்களிடம் சென்று சட்டத்துக்கு அடிபணிந்த மறத்தமிழனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் வெளியே கொண்டுவரமுடியாத நிலையில் இன்னும் சிலர் இதே சட்டத்தில் கைது செய்யப்படுவதாலும் இவரது சிறை வாசத்துக்கான முடிவு எப்போது என தெரியாமலே இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஒன்றாக கூடி ஆலோசனைகளை நடாத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். அரசியலில் பழம் திண்டு கொட்டை போடப்போகும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஆகியோரில் ஒருவர் நிற்கும் ஒரு தொகுதியில் சீமானை நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்காம். இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சீமானை நிறுத்தினால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக தேர்தல் களத்தில் தாமே இறங்கி வேலை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள். அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நிற்பவர்களை சந்தித்து சீமானையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விட இருக்கின்றனராம்.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மீண்டும் ஒருவர் தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குள் வரப்போகின்றார். ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒரு தமிழன், அதிலும் நெஞ்சில் உரமுடைய உண்மைத்தமிழன் வருகையில் மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். எனவே இயக்குனர் சீமான் எம்.பி. சீமானாக மாறும் நாள் தொலைவில் இல்லை.













