
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிக்க வரக்காரணமே நடிகர்கள் தான் என்பதை இயக்குனர்கள் சாட்டாக சொல்லி வந்தாலும் உண்மையும் அதுவே. அப்படி வரும் இயக்குனர்களில் ஒரு சிலர் நடிகர்களையே மிரள வைப்பதும் சிலர் மிரண்டு போவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
திமிரு என்னும் பிரமாண்டமான வெற்றித் திரைப்படத்தை கொடுத்த திமிரான இயக்குனர் தருண்கோபி இந்த வகையில் நடிகராக அவதாரம் எடுத்தார். விஷால், சிம்புவுடன் அடிதடி என அக்சன் ஹீரோவிற்கு உரிய அந்தஸ்து தனக்கு இருக்கின்றது என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்தவர். பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் முக்கியமானவர் இவர். நடிகராக தன் முதல் படத்திலேயே அசத்தி விட்டார். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றாலும் பெரிதாக யாரும் அந்த படத்தை கண்டு கொள்ளவில்லை என்பது என்னவோ உண்மைதான்.
இந்த நிலையில் நந்தி பட விழாவில் பேசிய தருண்கோபி, நடிகர்களை தாளித்து எடுத்து விட்டார். நடிகர்கள் சிலரின் நடவடிக்கையால் தான் நான் நடிக்க வந்தேன் என வழக்கமான புராணம் பாடியவர், மாயாண்டி குடும்பத்தை எந்த ஒரு நடிகரும் பாராட்டவில்லையே என்ற ஆதங்கத்தை கொட்டினார். அதேபோல பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை ஒரு சில நடிகர்கள் செய்த வேலையை சொல்ல எனக்கே பிடிக்கவில்லை என சொல்லி, விட்டார் பாருங்கள் ஒரு இடைவேளை. தொடர்ந்து பேசியவர், அண்மையில் தான் வேட்டைக்காரன் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் அங்கே விஜயை சந்தித்ததாகவும் சொன்னவர், விஜய் தன்னை பார்த்ததுமே கலக்கிறிண்ணா உங்க படம்தான் இப்போ டாப் போல என பாராட்டினார் அவரோட நல்ல மனசு யாருக்கு வரும் அவரைப்போல மற்ற கதாநாயகர்களின் மனமும் இருந்து விட்டால் நாங்கள் ஏன் நடிக்க வருகின்றோம்? வரவே மாடோம் என கொட்டித் தீர்த்து விட்டார்.














