ஆதவன் திரைப்படம் எல்லோரும் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து விட்டனர். உண்மையில் பல ஓட்டைகள் இருந்தாலும் சாதாரண சினிமா ரசிகனுக்கு பிடித்த ஒரு பக்கா கமர்சியல் திரைப்படம் தான் இந்த ஆதவன். சூர்யா என்னும் நடிகரிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் வந்ததை தான் பலரால் ஏற்கமுடியாமல் போய் விட்டது. சரி வந்த திரைப்படத்தை பார்த்த எல்லோரும்( நான் உட்பட) ஏதோ பார்க்க கூடாததை பார்த்து விட்டதைப் போல ஒரு அனுபவம் பெற்று விமர்சனம் எழுதியது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை. இப்போ ஒவ்வொரு காரணங்களால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த சூர்யாவின் ஆதவன் ஏனோ சரியாக உதிக்காமல் ஒரு முகம் காட்டிவிட்டு அஸ்தமித்து விட்டான்.

முதலில் ஆதவனுக்கு பாதகனாக அதிக எதிர்பார்ப்பு. கே.எஸ் ரவிக்குமார் என்னும் நல்ல இயக்குனர் விதவிதமான படங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து தளபதிகள் ஸ்டார்களை ஓரம்கட்டி விட்டு முதல் நிலை நாயகனானாக இருக்கும் சூர்யா குருவி என்னும் அமோக வெற்றி(??????) பெற்ற திரைப்படத்தை தொடர்ந்து தயாரிக்கும் படம் என்பது மட்டுமன்றி தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி நயன்தாரா நடிப்பில் தொடர் சொத்தப்பல்களை தொடர்ந்து வரும் படம் என்னும் சிறப்புகளே அமைந்து விட்டன.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி,கமல்,அஜித் என பெரிய நடிகர்களோடு வெற்றிக்கூட்டணி கொண்டவர். இவராலும் நிமிர்த்த முடியாமல் போனவர் தளபதி மட்டுமே. இப்போது அவர் அவரிசையில் அவர் நண்பர் சூர்யா. கே.எஸ் .ரவிக்குமார் என்றாலே ஒரு கலகலப்பான படம் கொடுப்பவர் என்னும் பெயர் உண்டு. அவர் படங்களில் நட்சத்திர பட்டாளம் இருக்கும். ஆதவனிலும் அது தொடர்ந்தது. தசாவாதாரம் என்னும் படைப்பில் இருந்து மீளாமலேயே கே.எஸ்.ஆர் ஆதவனில் களம் இறங்கியது தெட்டத் தெளிவாக தெரிகிறது. கதையை விட திரைக்கதையில் கில்லாடியான இயக்குனர் இங்கே தள்ளாடிப்போய்விட்டார். நொண்டியடிக்கும் திரைக்கதையை கொடுத்து தனித்தன்மையை கெடுத்து விட்டார். அதேநேரம் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன அவரின் பாதை என்ன ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என தெரியாமல் அவரும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டார்.

அடுத்தவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து குருவி படம் எடுத்தேன் என சொன்னவர் குருவியை வெற்றிப்படம் என்றாலும் குருவி சொதப்பிய சொதப்பல் யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தில் நடித்த கதாநாயகன் விஜய்க்கு மாஸ் இருந்தது. இங்கே சூர்யாவோ சிறந்த நடிகர் மாத்திரமே. மாஸ் ஹீரோ செய்ததுக்கே துவைத்தெடுத்தவர்கள் சூர்யா என்னும் நடிகன் செய்வதை ஏற்பார்களா என தெரியாமல் உதயநிதி விளையாடி விடார். அதேநேரம் காசை தண்ணீராக செலவழிக்க ஒரு நல்ல தயாரிப்பாளர் இருக்கின்றார் என குருவியில் நிரூபித்தவர் இவர். எனவே இவரை சரியாக பயன்படுத்தி இருக்கலாம் கே.எஸ்.ஆர். ஆதவனின் சில காட்சி அமைப்புக்கள் குருவியை நினைவு படுத்தாவிட்டால் நீங்கள் எல்லாம் கஜினிகள் தான்.

அடுத்து இளம் கதாநாயகர்களில் எந்த அடைமொழியும் இல்லாமல் தனக்கென ஒரு பாணியில் நடித்து இப்போதுள்ள பலரின் இதயத்தில் வேகமாக இடம்பிடித்து வந்தவர்தான் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் நல்ல கதை தரமான நடிப்பு. அனைவரையும் கவரும் சூர்யாவின் திசை முடிந்து விட்டதோ என எனக்கு தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் இளம் நாயகர்கள் என்றால் விஜய் அஜித் இரண்டுபேரும் தான். எந்த போட்டியும் இல்லாமல் இருவரும் வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் உச்சத்தில் இருந்தால் அஜித் அதல பாதாளத்திலும் அஜித் எழுந்து விட்டால் விஜய் படுத்துக்கொள்வதுமாக இருந்து வந்தது. இடையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் வந்த விக்ரம் தில்,தூள்,ஜெமினி,சாமி என கலக்கிக்கிண்டிருந்தார். அந்த நேரம் விஜய் அஜித் எங்கே என தேடும் நிலை. அதன் பின் விஜயின் திருமலையோடு எல்லாம் மாறியது.

கடகடவென வெற்றிமேல் வெற்றி குவித்து விஜய் உயர்ந்தார். விக்ரம் அப்பப்போ தான் இருக்கின்றேன் என ஒருசில படம் கொடுத்தார். இந்த இடையில் அந்நியன் வந்தாலும் விஜயின் நம்பர் 1 என்ற இடத்தை விக்ரமால் அசைக்க முடியவில்லை. இதேநேரம் கவிழ்ந்து போய் இருந்த அஜித்தும் தன்னை ஓரளவு தூசு தட்டி வர மீண்டும் ஒரு சில பரப்பரப்பான ஆட்டங்களோடு இந்த மூவரும் அடங்கி விட. சூர்யாவின் ஒளி பரவத்தொடங்கியது. இதற்கு இன்னொரு காரணம் ஜோதிகா என்னும் புகழ் பெற்ற நடிகையை சூர்யா திருமணம் செய்து கொண்டதும் ஒன்றே. காரணம் ஜோதிகாவிற்கு இருந்த பெரிய ரசிகர் கூட்டத்தையும் சூர்யா சேர்த்துக்கொள்ள காரணமாகிவிட்டது. அதேநேரம் இப்போதெல்லாம் வெளிப்படையாக ஜோதிகா புகழ்பாடுவது சூர்யாவிற்கு பழக்கமாகிவிட்டது. இது தனக்கு நல்லதென அவர் நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால் மனைவியின் பெயரை வைத்து காலத்தை ஓட்டுகின்றார் என்ற பெயரும் சேர்ந்துவிடும்.இப்போது அவரின் ஆட்டமும் முடிந்து இன்னொரு நடிகரின் கையில் இன்னும் சில ஆண்டுகள் போகப்போகும் நேரம் வந்து விட்டதாகவே நான் உணர்கின்றேன்.
காரணங்கள் உதிக்கும்......