உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?



கம்பி
க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.

இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.

எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?


அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
Share:

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி

இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....



இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி.
Share:

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்



இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.

கதிர்!

யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத்துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.

வழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.

தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.
"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.
"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்." பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.
ஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.
"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது"
"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ?"
"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்"
"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ"?
"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி"
"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லாம் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை"
"என்ன ஸ்டுடென்ட் விசாவோ...?"
"ஓமோம்"
"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே"
"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே"
"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்"
"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.

கதிர் வீட்டில்.

"அப்பா! இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா? பெடியன் போகணும் ............." கதிரின் அம்மா ஜெயந்தி.

"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்." - கணேஷ்.

புகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.
"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்
"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்...." இது திவ்யா
"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை...." இது கதிர்.
"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்" - திவ்யா
"எதுக்கடி?"
"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே......." என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் "ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.

"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....................................." என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.

"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......

(தொடரும்.......)

Share:

Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!



எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.

என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும் தமிழே! என் உயிரினும் மேலான தமிழே! என நான் உன்னை விழிக்க மாட்டேன். காரணம் இன்று பலர் உயிரிழக்க காரணமாக இருந்த உன்னை எப்படி நான் அப்படி அழைப்பது. இது நீ செய்த பாவமா இல்லை நாங்கள் செய்த பாவமா? இலங்கையில் ஒரு புறம் தமிழன் அழிந்து கொண்டிருக்க இந்தியாவில் மத்திய அரசோ தமிழனின் கத்தும் குரலையும் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் தம் நாடு விட்டு உறவு விட்டு எங்கெங்கோ வாழும் என் போன்றவர்கள் தான் உன்னை காப்பாற்ற போகின்றார்களாம். இந்த கொடுமையை சொன்னால் எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

உன்னை தன் நாவினின்று பிறக்க வைக்கும் பல நல்லுயிர்களை நான் காண்பது இங்கே அரிதாகிவிட்டது. பெரும்பாலும் வேற்று நாட்டுக்காரர் தான் அதனால் தமிழ் பேசும் நபர்களை காண்பது அரிதாகிவிட்டது என நான் காரணம் சொன்னால் நீ என்னை அடித்தே கொல்ல வேண்டும் தமிழர்கள் பலர் இருந்தும் அங்கே உன்னை தேட வேண்டி இருக்கின்றது. சில நேரங்களில் நம்மை பற்றி அடுத்தவர்கள் சொல்வதை தமிழர்கள் நாம் உண்மையாக்கி உனக்கு அபகீர்த்தி தந்துவிடுவோமா என பயமாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள். இன்று பல்வேறு விதத்தில் பெயர் சொல்லும் பெரிய சக்தி. ஆனால் எங்கள் மொழியை காப்பாற்ற தெரியாமல் நாங்கள் போடும் கூத்தை நினைத்தால் நான் வெட்கி தலைகுனிகின்றேன். இருபது இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து சேர்ந்த ஆண்கள் சொந்த நாட்டு பெண்களை திருமணம் முடித்து அல்லது அதன் பின் பெண்கள் வர என இன்று பல அந்நிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை பல. அதுவும் லண்டனில் முக்கிய ஒரு மொழியாக சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விட்டாய் நீ. தமிழ் நாட்டிலேயே செம்மொழியாக்க செலவழித்த ஆண்டுகள் பல இருக்கையில் செந்நிறத்தவனே நின் சிறப்பறிந்து தந்த பெருமை அது. அப்படி இருக்கையில் உன் பெருமையை உன்னை சொல்லியே வயிறு கழுவும் நம்மில் சிலரும் உன்னையே மூச்சு, பேச்சு என வாழும் சிலரும் உன்னை வைத்து வியாபாரம் செய்வதை என்னால் பொறுக்கமுடியவில்லை.

தனியே வந்து பின் துணையை தேடி அதன் விதைகளை கனிகளாக்கி அறுவடை செய்யும் நம்மவர்கள் நம் பழையதையும் உன்னையும் மறந்துவிட்டார்களா என பயம்தான் வருகின்றது. எவனை பார்த்தாலும் ஹாய் சொல்கின்றான் தமிழன். சரி அதுதான் அறிமுகம் என நினைத்தால் அதை தொடர்ந்து வந்து விழுகின்றது உன் தலை. காரணம் அவன் பேசும் தமிழில் நீ செத்துப்போகின்றாய். ஆங்கில மொழி சரளமாய் புகுந்து Goal அடிக்கிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் தமிழ் என உன்னை அழைக்கும் தமிழன் தன் சுய நலனுக்காய் உன்னையே விற்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் நம்மூத்தோர் இன்றும் தமிழை பேசினால் அது அமிர்தம் தான். ஆனால் அவர்கள் தான் பேச தயங்குகின்றார்கள்.

வீட்டில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என தங்கள் குழந்தையிடம் கண்டிக்கும் உன் பிள்ளைகள் அங்கே தொடங்குகின்றார்கள் உன் முதல் கள பலியை. அதன் பின் உன்னை அறிந்து கொல்ல(எழுத்துப்பிழை அல்ல) , படிக்க என அதுக்கு வேறு பிரத்தியேக வகுப்புக்கள், பரீட்சைகள் வைத்து அதில் என் பிள்ளை சித்தி அடைந்துவிட்டான் என ஸ்வீட் எடு கொண்டாடு என கொண்டாடி உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள். உன்னை தாய் மொழியாய் பெற்றவர்கள் உன்னையே தனி வகுப்புக்கு சென்று கற்று அதை வெற்றியாய் கொண்டாடும் இழிச்செயலை என்ன சொல்வேன். சிறுவயதில் பிள்ளையின் மனதில் விதைக்கும் விஷம் விருட்சமாகும் போது What is this Culture? Why you waste to your time for tamil? என அந்த பிள்ளை கேட்கும் நிலைக்கு வளர்த்து விடுகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யும் சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையிடம் கேலிக்குரியதாக இருக்கின்றது. இது சொல்வதற்கு வெட்கமாய் இருக்கின்றது.

பிள்ளை குழப்படி செய்தால் பிள்ளையை தண்டிக்க முடியாது. என்மேல் கைவைக்க நீங்கள் யார் நான் இந்த நாட்டு குடிமகன் என பெத்த தாய் தந்தையையே உருட்டுகின்றது மிரட்டுகின்றது விவரம் அறிந்த குழந்தை. அதை தாண்டியதும் குடி கும்மாளம் டிஸ்கோ பப் என பிள்ளையின் அட்டகாசம் உன்னையும் உன் பண்பாட்டையும் கொல்வதற்கான வலை விரிகின்றது. இதை தட்டிக்கேட்க முடிவதும் இல்லை தடுக்க முடியவும் இல்லை. பையன்கள் இப்படி என்றால் பெண்களோ அரைகுறை ஆடையும் கையில் ஆறாவது விரலும் நிழலில் இன்னொரு நிழலும் மனதில் பல இதயங்களும் என மாறி அடுத்த தலைமுறையின் தலை எழுத்தை இடியப்ப சிக்கல் ஆக்கிவிடுகின்றார்கள். இதற்கெல்லாம் பாவிக்கப்படுவது உன் பெயர் தமிழே.

சடங்கு சம்பிரதாயத்துடன் நடந்த கல்யாணங்கள் மாறிப்போய் தென் இந்திய பிரபலங்களின் சிறப்பு வருகைகளில் நடக்கிறது எம்மவரின் பிறந்த நாள் கல்யாண நாட்கள். தமிழன் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இன்றி கடந்து போகின்றான் தன் மானமும் பிறர் மானமும் பற்றி அடிக்கடி பேசும் தமிழன். உண்மையில் இந்த இடத்தில் ஒரு பட வசனம் தான் நினைவுக்கு வருகின்றது. அதிகமாய் தன் மானம் பற்றி கதைப்பதும் தமிழன் தான் அதேபோல தன் மானத்தை காப்பாற்றாமல் நாறடிப்பவனும் அவன்தான்.

அண்மையில் ஒரு வானொலியில் இதை ஒரு தலைப்பாய் எடுத்து சிலரிடம் இதை பற்றி கேட்ட ஒரு நிகழ்சி நடந்தது. உண்மையில் அதை கேட்கும் போது இப்படி ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கு தமிழன் வந்துவிட்டானே என்ற வெட்கம் தான் எனக்கு வந்தது. அதில் ஒருவர் இந்த நவ நாகரிகத்துக்கு நாங்கள் மாற வேண்டும் என்பதற்காய் ஏற்க முடியாத உன்னை கேவலப்படுத்தும் காரணியை சொல்கின்றார். ஒரு தாய் சொல்கின்றார் தன் பெண்ணுக்கு தானே கட்டை சட்டையும் அதுவும் இதுவும் கொடுப்பேன் என. எங்கே போகிறது தமிழே உன் கலாசாரம். ஆனால் அதே நிகழ்சியில் இன்னொரு பெண் கூறிய கருத்து எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும் என் மனநிலையையும் பிரதிபலித்தது. நாம் தெளிவாக் திடமாக இருந்தால் எந்த நண்பியும் என்னை இந்த உடுப்பு போடு என கட்டளை இடமாட்டாள் அங்கே இங்கே என இரவில் கூப்பிட மாட்டாள் அதேபோல தண்ணி கிண்ணி என இழுக்க வைக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் எம் மன திடம் வேண்டும் என அவர் சொன்ன கருத்துக்கு என்னையறியாமல் புல்லரித்துவிட்டேன். நானும் எத்தனயோ வழிகளை தாண்டி வந்தவன் இன்றும் என் நண்பர்கள் சிலர் கட்டாயப்படுத்தியும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லையே. உண்மையில் எங்கள் மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என அவர் சொன்னது எத்தனை உண்மை என உன்னை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் ஏன் சிந்திக்கவில்லை.

அண்மையில் லண்டனில் ஒரு தமிழ் கலை நிகழ்ச்சிக்கு அறிவிப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை கோட் சூட்டில் தான் வரவேண்டும் என சொல்லிவிட்டார்கள்.(கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே.) அந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் இங்கிலாந்து அமைச்சர் ஒருவர். தமிழை சொல்ல போகின்ற தமிழில் நடக்கப்போகின்ற ஒரு விழாவுக்கு எதுக்கு ஒரு ஆங்கில அமைச்சர். அவருக்கு அந்த நிகழ்வில் என்ன புரியப்போகின்றது. ஏன் இப்படி அவரை அழைத்தீர்கள் என கேட்டதுக்கு அவர் வந்தால் தான் ஏதும் கிடைக்கும் என்றார்கள். உன்னை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கூத்து தேவையா தமிழே. அதை விட இன்னொருகொடுமை அங்கே நிகழ்ச்சி செய்த பிள்ளைகள் கதைத்த தமிழுக்கு எமி ஜாக்சன் நமிதா பேசும் தமிழ் எவ்வளவோ மேல். வரவேற்புரை செய்த பையனின் தமிழ் அறிவை எண்ணி நான் உன்னையே கடிந்துகொண்டேன். இறுதியில் அந்த விழா தலைவர் உரையாற்றும் போது சொன்னா பாருங்க. இந்த விழாவுக்கு நான் ஆங்கிலத்தில் தான் என் உரையை தயார் செய்து வைத்திருந்தேன் அதனால் இப்போது தமிழில் சிறிது பேசும் போது தவறு வந்தால் மன்னித்துவிடுங்கள் என்று. என்ன கொடுமை இது. தமிழ் விழாவுக்கு எதற்கு ஆங்கில உரை. (இதுவும் அதுக்கு தான்.) அத்துடன் தமிழ் கதைக்க நடுக்கம் வருதாம். இதில் இன்னுமொன்றை சொல்கின்றேன் அங்கே வந்த அதிகாரியும் விருந்தினருமான ஒருவர் நான் பேசிய தனி தமிழ் கேட்டு தான் சந்தோசமாக இருந்ததாக என்னை வாழ்த்திவிட்டு போன போது அவர்களுக்காய் ஆங்கில மோகம் கொண்டு கத்தியவர்கள் கொஞ்சம் சிந்தித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

நான் கேட்பது எல்லாம் உன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்று தான். உன்னை பேச சுவாசிக்க பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எதையும் பேசிவிட்டு போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் உன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாமே. உன்னை பற்றி அறியா விட்டால் தெரியாவிட்டால் உன்னை பற்றி பேசாமல் இருக்கலாமே. உன் பெயரை சொல்லி வேறு வேறு காரியங்களுக்கு பணத்தை கொள்ளை அடிக்காமல் இருக்கலாமே. எல்லாவற்றுக்கும் மேலாய் உன்னை வாள வைக்காவிட்டாலும் வாழ்விழக்க வைக்கமால் இருக்கலாமே என்பதுதான். நீ கேட்கலாம் நீயும் இதில் ஒருவன் தானே என்று. நான் எங்கும் நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன் உன்னை நான் எங்கும் எதற்கும் என் சுய நலத்துக்காய் பாவித்ததில்லை. அதே போல இங்கும் பலர் இருக்கலாம் ஆனால் இந்த பதிவின் தொப்பி அளவானவர்கள் செய்வது என்னை உன்னை என் உன் வீட்டு பக்கத்துவீட்டு காரனை கூட பாதிக்கிறது. இது தனி மனித சொத்தல்ல நினைத்தவர் நினைத்தபடி நடக்க. எனவே நீ தான் உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் தமிழே.....

தொப்பி அளவானவர்களே நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தமிழ் என சொல்லவும் தமிழன் என புளங்காகிதம் கொள்ளவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று. நான் என்னையும் இந்த கேள்வியை கேட்டு பார்க்கின்றேன். சுய பரிசோதனைக்காய்.

இப்படிக்கு,
தமிழன்.(இப்படிதான் எல்லோரும் சொல்கின்றார்கள்.)
Share:

Friday, June 17, 2011

பதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு


பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)

எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். இது புதுசில்லை. கடந்த சில ஆண்டுகளாக பதிவுலகில் நடக்கும் ஒரு கேவலமான விடயத்தை சொல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது அவன் இவன் வந்திருக்கும் நேரம் எவனுக்குஇது பொருந்துமோ அவன் போட்டுக்கொள்ளட்டும்.

பதிவுலகில் ஒரு பதிவர் கஷ்டப்பட்டு யோசித்து எழுதும் பதிவுகள் சிலவற்றை அவர்களின் அனுமதியின்றி தங்கள் தளங்களில் வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொள்கின்றார்கள் சில வக்கிரக்காரர்கள். குறிப்பாக பிரபல இணையதளங்கள் கூட இப்போது சில வலைப்பதிவர்களின் செய்திகளை அப்படியே போடுவது தான் கொடுமை. ஆனால் இதில் சந்தோசப்படக்கூடிய விடயம் என்னவென்றால் பதிவுலகில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்து இடும் அளவுக்கு அவர்களின் எழுத்தின் தரம் இருக்கின்றது என இணையதளங்களே பறைசாற்றுகின்றன. ஆனால் சில பதிவர்கள் சில இணையதளங்கள் இப்படி அடுத்தவரின் பதிவுகளை போடுவது ஏனோ?

பதிவுலகுக்கு வா என யாரும் யாரையும் இழுத்து வரவில்லை. இத்தனை பதிவு போடு என வேருட்டவில்லை அப்படி இருக்கையில் நேரம் கிடைக்கையில் சொந்தமாக பதிவு போடுவதை விடுத்தது ஏன் இப்படி அடுத்தவன் பதிவை போடவேண்டும். இன்னும் விடை தெரியாக்கேள்வி இது? இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் பதிவர்கள் தங்கள் தளங்களில் முந்திக்கொண்டு விமர்சனம் வர வேண்டும் என்பதற்காய் படங்களை பார்க்காமலே இன்னொருவன் தன பார்வையில் எழுதிய எழுத்தை அப்படி அச்சு பிசகாமல்(ஒரிஜினலில் எழுத்து பிழை இருந்தால் இங்கேயும் இருக்கும்) போட்டு ஏன் அவமானப்படுகின்றனர். இன்னும் சிலரோ ஏதோ தானே எழுதியது போல அதுக்கு பில்ட் அப் வேறு. கந்த சாமி படம் வந்ததில் இருந்து நான் அவதானிக்கும் விடயம். பல தளங்களில் ஒரே படத்தின் விமர்சனம் ஒரே மாதிரி இருக்கும். அப்படி என்றால் அந்த அத்தனை தளமும் ஒருவராலா நடத்தப்படுகின்றது. இல்லையேல் அவருக்கு ரசனை இல்லையா? ஒரு படம் பார்க்கும் போது அது தாய்க்கு பிடிக்கும் தனயனுக்கு பிடிக்காமால் இருக்கலாம் அப்படி இருக்கையில் எந்த வேறு பாடும் இன்றி ஒரு படத்தின் விமர்சனம் அமைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

நண்பர்களே! உங்களுக்கு நேரம் இல்லை என்றால் எழுதாதீர்கள். அதற்காக தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டி பதிவுலகில் விபசாரம் செய்யாதீர்கள். இன்று இந்த கோப பதிவு இட காரணம் அவன் இவன் படம் எப்படி இருக்கு என முதலில் வந்த சில விமர்சனங்களை படிக்க ஆரம்பித்தால் ஒரு சில தளங்களில் வழக்கம் போல கோப்பி விமர்சனங்களை காண கிடைத்தது. நிச்சயம் வரும் நாட்களில் இது அதிகரிக்கும். படம் வந்து சில மணிநேரமே ஆகி இருக்கும் நிலையில் ஒருவர் நல்லது என எழுதி விட்டால் அதை கோப்பி செய்து போட்டு அது நல்ல படம் என்றோ அல்லது கூடாமல் எழுதி இருந்தால் அதை போட்டு கூடாது என பரப்பும் ஒரு கேட்ட காரியத்தை தான் இந்த கோப்பி பேஸ்ட் பதிவர்கள் செய்கின்றார்கள். ரசனை நிச்சயம் வேறுபாடும். ஒரு செய்தியை கூட வித்தியாசமாக தரும் எத்தனயோ பேர் இருக்கையில் ஒரு படத்தின் விமர்சனத்தை ஒரே மாதிரி தருவதை எப்படி பொறுக்கமுடியும். இதை தடுக்க இப்படி கோப்பி செய்யும் உங்களால் மட்டும் தான் முடியும். உங்கள் மனசாட்சியால் மட்டும் தான் முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் .நல்ல புதிய தரமான பதிவுகள் வரும்.......
Share:

உலககிண்ணத்தின் பின் தோணி மொட்டை போட்டது ஏன்?நானே ரூம் போட்டு யோசிச்சன்


இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த தலைவர் உலகில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்கும் கிண்ணங்களையும் வென்ற ஒரே கிரிக்கெட் அணி தலைவர் என்ற பெருமைக்குரிய தோணி T20 உலக கிண்ணத்தை வென்று நாடு திரும்பியதும் செய்த முதல் காரியம் தன் அழகிய தலைமுடியை வெட்டி எறிந்தார். தன் அழகிய முடியுடன் போஸ் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி இவர் செய்தார் என அந்த நேரம் நாம் எல்லாம் குழம்பி போனோம். விடுப்பா தலையில பொடுகு வந்திருக்கும் அதுதான் வெட்டி இருப்பார் என எத்தனை பேர் ஆசுவாசப்படுத்தினார்களோ.

சரி அதுதான் முடிஞ்சுது இப்போ 50ஓவர் உலக கிண்ணம் முடிய மனிசர் மொட்டை போட்டிட்டார். திருப்பியும் எல்லோரும் குழம்பி போனார்கள். அட இது தோணி ஸ்டைல் என்றும் நேர்த்தி என்றும் சிலர் சொல்ல காதில கேட்டுது. என்னடா இந்த மனிசன் எப்ப பார்த்தாலும் இப்படி பண்ணுதே. என்ன காரணமாய் இருக்கும் என்று எனக்கும் குழப்பம். சென்னை பக்கம் வந்த மனிசனிட்ட நேரே கேட்கலாம் எண்டால் லண்டனில இருந்து போகவும் முடியல. இருந்தாலும் இதற்கான காரணம் என்ன என நானே ரூம் போட்டு யோசிச்சன். அப்பாடி ஒரு மாதிரி அவர் மொட்டைக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு காரணங்கள் கண்டு பிடிச்சிருக்கேன்.

உலக கிண்ணம் முடிய கண்டிப்பாய் எல்லோருடனும் சேர்ந்து, தனிய என இவரை வளைத்து வளைத்து படம் எடுப்பார்கள் என்பது அவருக்கே தெரியும் அப்படி இருக்கையில் குழுவாக இருக்கும் படங்களில் தான் மொட்டையுடன் இருந்தால் தான் தனித்து தெரிவதுடன் தன் தலையை சுற்றி ஒளிவட்டம் தெரியும் என்பது இவ்வளவு தெரிந்த தோனிக்கு தெரியாதா என்ன?

டேய் அவன் "தல"ய பாரடா! பாரடா மொட்டை "தல"! என எல்லோரும் பேசி இவர் தான் தல என சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக தலையின் அல்டிமேட் ஐடியா இது.

அப்புறம் பாருங்க இது மூன்றாவது காரணம். அடக்கமாய் இருக்கான். கோபமே வருதில்லை. இவன் என்ன தலைக்கனம் பிடிச்சவனா? பாரடா வென்றவுடன் தலைக்கனம் ஏறிட்டு என யாரும் சொல்லிட கூடாதே. அதனால் தன் மண்டையில் இருந்த முடியை எடுத்துவிட்டால் தலையில் கனம் இல்லை என சொல்லலாமே என்பதற்காக தன் முடியை தாரவார்த்துவிட்டார் மிஸ்டர் கூல்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக தோனியின் மனைவி கூட சொன்னார்.(எப்படி அவங்களை தெரியும் என கேட்கப்படாது) ஆனால் தன்னால் கூட அதை கண்டு பிடிக்க முடியவில்லை. முடிஞ்சா நீ room போட்டு யோசித்து கண்டு பிடிச்சா எனக்கும் சொல் என்று சொல்லிட்டு போனை வைத்துட்டார். என்னடா அந்த இழவு புடிச்ச காரணம் என யோசிச்சுட்டே இருந்தேன். என்ன ஆச்சரியமுங்க தோணிவந்து டேய் டாங்கு மண்டை தலையா எதுக்குடா இப்படி யோசிச்சு யோசிச்சே என்னை போல மண்டையில மயிர் இல்லாமல் போகணும் என நினைக்கிறியா எண்டார். இல்லை பாஸ் எல்லாருமே உங்க தல முடி பற்றி பேசுறாங்க ஆனால் யாருக்குமே அதுக்கான காரணம் தெரியல பாஸ் என்றேன். டேய் அது வேற ஒன்றும் இல்லைடா என் தலையில முடி இருந்ததால வெட்டினேன் உன்னை மாதிரி சில லூசுப்பசங்க இப்படி அப்படி என எழுதினா நான் என்னடா பண்ணுவேன் எண்டு சொல்லும் போது தோனிக்கு அடிக்கணும் போல இருக்க கையை ஓங்கினேன். அம்மா எண்டு பெரிய சத்தம் கேட்டுது. என்னடா இது அடிச்சா தோணி தானே கத்தனும் நானே கத்துரேனே என எழும்பி பார்த்தா நடு ராத்திரியில கார்த்திகா(இப்ப நம்மாளு இவங்க தான் என சொல்லாமல் சொல்லிட்டன்.) ஹன்சிகா,அமலா பால் என மிஸ்டர் கூல் வந்து என்னை மிஸ்டர் ஹாட் ஆக்கிட்டு போனது தெரிஞ்சுது.

இதுக்கு பிறகும் யாரும் தோணி மொட்டை போட்டாதுக்கு காரணம் தேடுவிங்களா? அடி பின்னிடுவேன்.
Share:

Monday, June 6, 2011

கிரிக்கெட் - போட்டோ கொமென்ட்ஸ்.

இலங்கை வீரர் டில்ஷான்






இலங்கை வீரர் சுரங்க ரக்மால்





இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தி பட்டேல்,விராத் கோலி மற்றும் சர்வான்





இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் தில்ஷன் மற்றும் இயன் பெல்








இந்திய மேற்கிந்திய நிகளுக்கிடையிலான போட்டியில் Danza Hyatt and Marlon Samuels








எனக்கு எதுவுமே தோணல நீங்களே கொமென்ட் போடுங்களேன்...



NO COMMENTS


Share:

எது விதை(18+)? - கிரியேட்டிவிட்டி மொக்கை.

அண்மையில் ஒரு சஞ்சிகையை படிக்கும் போது இந்தியாவின் பெண்ணாடம் என்னும் இடத்தில் இருந்து என்.மதியழகன் எழுதிய ஒரு கவிதை என்னை இன்னொரு விதமாக சிந்திக்க வைத்தது. சில கவிதைகளை வாசிக்கும் போது எமக்கு வேறு விதமான அர்த்தங்கள் வந்துவிடும். கவி எழுதியவரின் கருத்துக்கு நாங்கள் வேறு ஒரு விதையை நினைக்க அவரோ அதை இன்னொரு விதையை வைத்து எழுதி இருப்பார். இங்கே மதியழகன் கவிக்கு எனக்கு தெரிந்த இரு விளக்கங்களை பகிர்கின்றேன்.

கடிகார முள்.
உனக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை விட அதிகமாய் துடிக்கிறது எனது கையில் இருக்கும் கடிகார முள்.

மிக சிறிதாக சுருக்கமாக இருக்கும் இக்கவியில் ஒரு காதலனின் ஏக்கம் தவிப்பு காதலிக்காக தவமிருப்பது என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் வாழ்வில் ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லி போயிருக்கின்றார்.(பதிவு எழுத தொடங்கிய நாளில் இருந்து எங்கே என்ன பாத்தாலும் அதில் ஒரு மொக்கை தேடி பிடிப்பது நமக்கு பழகிடிச்சு. காதலிக்காக காத்திருக்கும் ஒரு காதலன் அந்த காதலி வருவாள் வருவாள் என எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என அவனுக்கு ஏன் அவளுக்கே தெரியாது. பெண்கள் எப்போதான் சொன்ன நேரத்துக்கு வந்திருக்காங்க. பல மணிநேரம் செல்லும் என்பதற்கு என்னங்க காரணம் குளிக்க போனால் குற்றாலம் போனது போல மணிக்கணக்கு எந்த உடை போடுவது என முடிவெடுக்க முக்கால் மணிநேரம் மேக்கப் போட மேலும் நான்கு மணிநேரம் என அவங்க வெளிக்கிட்டு வந்து சேர ஒரு யுகம் முடிஞ்சிடும். இதை அவர் சொல்ல விளைந்திருக்கலாம் இருப்பினும் அவர் இன்னுமொரு முக்கியமான கருப்பொருளை சொல்லாமல் சொல்லி போயிருப்பாரோ என எனக்கு ஒரு சந்தேகம்.

எப்படியும் காதலி வந்த பின்னர் பேச்சு கொடுத்தோ அல்லது அடி உதை வாங்கியோ காதலன் துடிக்கப்போவது நிச்சயம். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் தான் துடித்துக்கொண்டே இருக்கின்றேன் என சொல்வதுடன் இப்பவே இப்படி துடிக்கிறான் நீ வந்த பின் உன் அடி மற்றும் கொடுமையில் இந்த கடிகார முல்லை விட துடிக்கப்போரேனே என்று சொல்ல வந்திருப்பாரோ என்று சந்தேகம்.

முக்கிய குறிப்பு: இந்த சிந்தனை எல்லாம் என் அனுபவோ என நீங்கள் கேட்கப்படாது, சந்தேகப்படக்கூடாது, ஏன் கொஞ்சம் கூட நீங்கள் அப்படி நினைக்கவே கூடாது என்பதற்காய் நான் ஒரு உண்மையை சொல்லுறேன். யாருக்கும் சொல்லாதிங்க. அடுத்தவங்களுக்கே ஆப்படிக்கும் இளவரசியின் இதயம் கவர் நாயகன் வந்தியத்தேவன் அவர்களின் வாழ்க்கை படிப்பில் இருந்து கிரியேட்டிவிட்டி செய்தது. நம்புங்க. ஆனால் இது என் மாமா பச்சிளம் பாலகன் நாடுகடந்த பதிவுலக செயலாளர் கோபியரின் கண்ணன் காதல் நாயகன்(வெட்டியா தோல்வியா என கேட்டு அவரை அசிங்கப்படுத்தப்படாது) வந்தியத்தேவன் இல்லை என்றால் நம்பவா போறிங்க.

Share:

Sunday, June 5, 2011

சூப்பர் ஸ்டார் லோஷன்.

லோஷன்!
இந்த பெயர் சொன்னதன் பின் எனக்கு அதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு என தெரியவில்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி சில சுவாரஷ்யங்களை சொல்லலாமே. கடந்த முறை அவர் பிறந்த நாளுக்கும் என் பதிவு தாமதமாக வந்தது. அப்போது அவரின் ரசிகர்கள் பதிவுலகை தொடரும் வானொலி நண்பர்கள் சிலர் லோஷன் அண்ணா பற்றி வந்த பதிவுகளை வாசித்துவிட்டோம் ஆனால் நீங்கள் எழுதப்போகும் பதிவுக்கு வெயிட்டிங் என்றார்கள். உண்மையில் சந்தோசமாக இருந்தது.....


ரகுபதி பாலசிறீதரன் வாமலோஷணன்(பேரை சொல்லும்போதே களைக்குது பாஸ்) இந்த பெயர் எனக்கு அறிமுகமானது என் சிறுபிராயத்தில். சக்தியின் முத்துக்கள் பத்து தான் என்னை இவர் பக்கம் திரும்ப வைத்த நிகழ்ச்சி. எதிர்காலத்தில் இவருடனே வேலை செய்யபோகின்றேன் இப்படி ஒரு நல்ல உறவு எனக்கும் அவருக்கும் இருக்கப்போகின்றது என எதுவுமே தெரியாமல் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்தில் இவர் நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கினேன். அதுதான் அவரின் வானொலி ஆரம்ப கால கட்டம் என்பது கூட தெரியாமல்..........அந்த வயதில் எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை லோஷன் அண்ணாதான் சிறந்த அறிவிப்பாளர் அதேபோல இவ்வளவு உயரத்தை தொடப்போகின்றார் எனவே இவரை ரசி என்று. தானாக சிறு வயதில் வந்தது இதுதான் அவர் கைங்கரியம். நான் எப்போதும் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் காரணம் சிறுவர் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் தன குரலில் கட்டி வைத்திருக்கிறாரே.

சக்தியில் தொடங்கிய பயணம் என்றென்றும் புன்னகை என தினமும் காலை சூரிய ராகங்களில் தொடர்ந்து ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே என அவர் பட்டையை கிளப்பும் இன்றுவரை நான் அவர் ரசிகன். என் வெற்றி அறிமுகம் எப்படியானது வெற்றி அனுபவங்கள் என்ன என்பதெல்லாம் என் கீழ்வரும் பதிவுகளில் சொல்லி உள்ளேன். ஆனால் அதையும் மீறி எனக்கும் அவருக்கும் இடையில் நடந்த சில சுவாரஷ்யங்கள் நினைத்து பார்க்கும் போது இன்றும் உயர்ந்து நிற்கின்றார்.







முதலில் லோஷன் அண்ணாவிடம் எனக்கு மிக பிடித்ததே சரியோ தப்போ பட்டதை பட்ட படி சொல்லுவது. உண்மையில் பலருக்கு இது இருப்பது குறைவு. எனக்கு இவரிடம் மிகப்பிடித்ததும் இதுவே. லோஷன் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள உறவில் எனக்கு பல சந்தேகங்கள். இது ஒரு குருசிஷ்யனுக்கானதா? ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமானதா? இல்லை ஒரு மேலதிகாரிக்கும் அவர் தலைமையில் வேலை செய்த ஒரு ஊழியருக்கானதா? இல்லை சகபதிவர் என்னும் உறவா? இல்லை ஒரு அண்ணா தம்பி உறவா? இல்லை வயது வித்தியாசங்கள் மறந்து எல்லாம் பேசும் ஒரு நண்பனா? சத்தியமாக இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் நம் உணர்வு மட்டுமே.

வானொலியில் நான் பணிபுரியும் நேரம் அவரை பார்த்து வியந்திருக்கின்றேன். பல விடயங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கின்றார். இணையம் இல்லாமல் பல விடயங்களை தன்னுள்ளே கொண்டு திரியும் ஒரு விக்கிபீடியா. (அதனால தான் விக்கி லீக்ஸ் வந்துதா என கேட்கப்படாது) இவை எல்லாவற்றையும் மீறி அடுத்தவர்களை மதிக்க தெரிந்த மனிதன். அவரின் வயதில் பாதிக்கு கொஞ்சம் தான் எனக்கு கூட (அப்பாடா லோஷன் அங்கிள் என நான் கூப்பிட காரணம் சொன்னாச்சு) ஆனால் நாங்கள் கூட ஒரு விடயம் சொல்லி அது சரி எண்டால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர். சரியை சிறுவன் சொன்னாலும் அதை மதிக்கும் மதிப்புக்குரியவர். அதனால் தான் இன்று எல்லோரும் அவரை மதிக்கின்றனர்.

என் வானொலி ஆரம்ப நாட்களில் என் மேல் அதிகம் நம்பிக்கை வைத்தவர் அதனால் தான் அத்தனை நிகழ்ச்சிகளும் செய்யும் வாய்ப்பை நான் பெற முடிந்தது. என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டவர். அதேநேரம் நான் தவறு செய்யும் போது தட்டி நிமிர்த்தவும் அவர் தவறவில்லை. சில நாட்கள் அவர் மேல் நான் கோபப்பட்டதும் உண்டு மனதில். ஆனால் அவை எல்லாம் உடனே மறைந்துவிடும் காரணம் அடுத்த தடவை அவரை சந்திக்கும் போது இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை கொண்டு போய்விடுவார்.

செய்தி வாசிக்க எனக்கு வாய்ப்பு வழங்கும் போது பொதுவாக எல்லோருக்கும் மணித்தியால செய்தி வாசிக்க கொடுத்துவிட்டு தான் பிரதான செய்தி கொடுப்போம் ஆனால் இங்கே மணித்தியால செய்தியும் இல்லை பிரதான செய்தி வாசிக்க போதிய ஆட்களும் இல்லை எனக்கு உன்னில் நம்பிக்கை இருக்கு என என்னையே என்னால் நம்பவைத்தவர். என் தனி ஆவர்த்தன நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு நன்றாக இருக்கு என அவர் போட்ட குறுந்தகவல்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. ஆரம்ப நாட்களில் ஒரு இமயத்தை பார்ப்பதை போல அவரை வியந்து தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னை அவரை நெருங்க வைக்க சில நாட்களே போதுமாய் இருந்தது. நெருங்கி பழகும் குணம் மட்டுமன்றி 04.02.2009 அன்று நடந்த ஒரு சம்பவத்தில் என்னை கடுமையாய் கடிந்து கொண்ட அடுத்த நிமிடமே நான் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தி SUPERடா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த கோபமே எங்கே போனது என தெரியவில்லை.

சில காலம் கடந்து வெற்றியின் காலை நேர செய்தி வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் என் அலுவலகத்தில் உயர் அதிகாரி, பத்து வருடங்கள் சாதித்த சாதனையாளர், அளவில்லா ரசிகர்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் மனிதர் அவர் நினைத்திருந்தால் காலையில் உனக்கு செய்தி இருக்கு ஆறுமணிக்கெல்லாம் என்று சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனால் காலை செய்தி உனக்கு போடுறேன் விடிய நான் வரும் போது உன்னை ஏத்த உன் வீட்ட வருவேன் இத்தனை மணிக்கு ரெடியாய் நில்லு என சொல்லி முதல் நாள் முதல் அந்த கடமையில் மாற்றம் வரும் வரை தினமும் என்னை ஏற்றி வந்தவர் இவர். இதை நான் சொல்ல காரணம் அறிமுகணாம ஒரு சில மாதத்திலேயே எனக்கு இப்படி என்றால் அவர் எந்தளவுக்கு தன கீழ் வேலை செய்த ஏனைய அறிவிப்பாளர்களுடன் எப்படி நடந்திருப்பார் என நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதுதானே ஒரு நல்ல தலைவனுக்கும் மனிதனுக்கும் அழகு.


காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணா சென்ற பின்னர் எனக்கு தருவதாக சொல்லப்பட்டாலும் பின்னர் அதை ரஜீவிடம் கொடுத்த நேரம் மனதளவில் நான் காயப்பட்டாலும் அந்த நிகழ்ச்சியை ரஜீவை கொண்டு வீழ்ச்சி பெற விடாமல் செய்யும் போது ஒரு சிறந்த மேலதிகாரியாக அவரின் அந்த முடிவை ரசித்தேன். காரணம் அந்த இடத்தில் நிச்சயம் என்னால் சுபாஷ் அண்ணா இல்லாத குறையை தீர்த்திருக்க முடியாது. எனவே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனி மனிதர் என்ற பாசம் மீறி கடமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒருவர். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவது போல தான் செய்த சினிமாலை நிகழ்ச்சியை என்னிடம் கொடுத்து அதற்க்கு ஆலோசனையை சொல்லி என்னை மெருகேற்றி அழகு பார்த்தவர். இந்த மனது உண்மையில் அவர் மேல் இன்னும் எனக்கு அவாவை கொண்டுவந்தது. இதை தொடர்ந்து விடியலை செய் என என்னிடம் ஒரு நாள் கொடுக்கும் போது அதை நான் நம்பவே இல்லை. ஆனால் அன்று மாலை முதல் எனக்கு ஆலோசனைகள் சொல்லி வெற்றியின் ஏனைய நிகழ்ச்சிகள் மூலம் நாளை ஒரு வித்தியாசமான சிறப்பான விடியல் இருக்கு என விளம்பரபடுத்த வைத்து அந்த நிகழ்ச்சியை என்னை செய்ய வைக்க யாருக்கு மனது வரும். அவர் எங்கோ ஒரு இமயத்தில் நின்று எங்களையும் தன்னுடன் வர சொல்லி இழுக்கின்றார் ஆனால் மன்னிக்கணும் அண்ணா எங்களால் நீங்கள் நிற்கும் இடத்துக்கு வரவே முடியாது.



செய்தி வாசிக்கும் போது எனக்கு ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே வாசிக்கும் பழக்கம் உண்டு. இதை பல தடவை கண்டித்ததுடன் ஒருமுறை அது பிரச்சனையை உருவெடுத்த நேரம் என்னை காப்பாற்றி அதன் பின் கண்டித்து திருத்திய நல்ல தல. இதே உடல் நிலை பிரச்சனையால் நான் வானொலியை விட்டு போகப்போகின்றேன் என நான் ஒருமுறை கூறியபோதுகூட யோசிச்சு முடிவெடு சில நாட்கள் விடுமுறை எடுத்து ரெஸ்ட் எடுத்திட்டு திருப்பி வா என சொல்ல எந்த மேலதிகாரியால் முடியும். இதுதான் இன்று அவரால் பல அறிவிப்பாளர்கள் உருவாகவும் உங்களை என்னை போன்ற ரசிகர்கள் அவருக்கு இருக்கவும் காரணம். அவதாரம் நிகழ்ச்சியை அவருடன் செய்ய நான் ஆசைப்பட்ட வேலை அதை செய்ய அனுமதி தந்ததுடன் நான் பயமாய் இருக்கு என சொல்ல எதுக்கு பயம் செய்டா என தட்டி தந்ததுடன் நிகழ்ச்சி முடியும் வரை ஒரு இடமும் என்னை தர்மசங்கட படவோ இல்லை பயம் என்ற எண்ணம் வரவோ விடாமல் சாதாரணமாக இருந்து என்னையும் செய்யவைத்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் வீட்டில் பொங்கல் இவர் பொங்குவதில்லை. அதுதான் நாடு முழுக்க இவர் குரல் கேட்டு பொங்கி கொண்டாடுகின்றதே. அத்தியாவசிய தேவை தவிர தான் விடுப்பு எடுப்பது எப்போதாவதே. இப்போதுதான் ஒரு வருடம் முத்த ல்தொடக்கம் ஞாயிறு லீவு என நினைக்கின்றேன். இந்த கடமையுணர்வு எப்போதும் வானொலி பற்றி சிந்திக்கும் அவர் புலன்கள் என ஒரு சிறந்த தன்னிகரில்லா ஊடகவியலாளர். சூப்பர் ஸ்டார் என இவரை நான் சொல்ல இன்னொரு காரணம் உண்டு அவருக்கும் ரசிகர்கள் நிறைய இவருக்கும் நிறைய இரண்டுபேரும் ரொம்ப சிம்பிள். அவரும் தன ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும் என நினைக்கின்றார் இவரும் நினைக்க மாட்டாரா என்ன? அண்ணே எப்போ அண்ணே அடுத்த கட்டம்.....(அப்பாடா சும்மா கொளுத்திப்போட்டிருக்கேன்......)


இனி லோஷன் அங்கிளின் இன்னொரு பக்கம்.................


அடுத்து பதிவுலகில் என்னை அழைத்து வந்தவர் இவர் தான். டேய் உன் பதிவுகள் உதவாது திருத்து என என் மொக்கைகளை கண்டித்த மொக்கை சிங்கம். எங்கள் அதிகார மைய முன்னாள் தலைவர்....எங்கள் அரட்டை குழுவின் அங்கிள்.....ஆனாலும் பாருங்கோ அரட்டை எண்டு வந்தால் அங்கிள் தொல்ல தாங்க முடியாது. நம்ம மாமாவையும் குஞ்சுவையும் அப்பப்ப என்னையும் பந்தாடுவது அங்கிள் தான்.....இன்னொரு முக்கியமான விஷயம்... யாராவது இருவருக்கு இடையில் பத்த வைத்திட்டு பறந்திடுவார். ஆனாலும் அப்பப்ப தன தலையிலும் பத்த வைத்துக்கொள்வார்.

என்ன தான் இருந்தாலும் இந்த மனிசனை வாட்டி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. சிங்கம் ஒரு நாளைக்கு சிக்காமலா போய்டும் எங்க கும்மில நல்லாய் வறுத்தெடுத்தா தான் எங்கள் எல்லோருக்கும் மன திருப்தி...அப்புறம் இந்த பிறந்த நாள் தன பதினாறாவது பிறந்த நாள் என சொன்னார் அங்கிள். எனக்கென்னவோ பயமாய் தான் கிடக்கு.....இன்னுமொன்று சொல்லிட்டு போறேன்...அங்கிளின் இன்னொரு பக்கம் என்ற இந்த கடைசி பகுதிக்கு எப்பிடியும் நான் கும்மியில கும்பாபிசேகம் செய்யப்படுவேன்....நேரம் ஆகிறது வரட்டே.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோஷன் அண்ணாவுக்கு என் குடும்பத்தினர் சார்ப்பாகவும், பதிவர்கள் சார்பாகவும், ஏனைய வானொலி அறிவிப்பாளர்கள் சார்ப்பாகவும், என் போன்ற உங்களை போன்ற அவர் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

ட்ரீட் கேட்டா கிடைக்கவா போகுது..அதனால கேட்கமாட்டேன்...
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive