நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிம்பாவே-இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை எவை என தெரிவும் ஆகிவிட்டன. ஆனால் இந்த தொடர் தொடங்கும் போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தது வழக்கம் போல சிம்பாவேயை ஓரம் கட்டிவிட்டு இந்திய இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடந்தது என்ன. வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென நினைத்தார்களோ இல்லை சிம்பாவே தானே என இளக்காரமாய் நினைத்தார்களோ தெரியாது இரண்டாம் தர இந்திய அணியை தெரிவு செய்ததாக கூறி அனுப்பி வைத்தனர் இந்திய தெரிவுக்குழுவினர். கெளரவம் பார்த்து இலங்கையும் தன் வழக்கமான அணியை விடுத்து இரண்டாம் தர அணி ஒன்றை அனுப்பி வைத்தது.
போட்டிகளை பார்க்க முதல் அனுப்பி வைக்கப்பட்ட அணிகள் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் வழக்கமான மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. சச்சின் மகா போர்மில் இருக்கின்றார் இவர் இல்லாதது நட்டம் சேவாக்கும் இல்லை. இவர் காயம் காரணமாக இழந்த போர்மை மீட்க ஒரு வாய்ப்பு அதுவும் வழங்கவில்லை. அடுத்து கம்பீர் அண்மைக்காலமாக பெரிதாக இவர் பிரகாசிக்கவில்லை. அடுத்து தல தோணி இல்லை யுவராஜ் இல்லை பந்து வீச்சிலும் முக்கியமானவர்கள் இல்லைதான் ஆனால் இந்தியாவின் வருங்கால அணி என எதிர்பார்க்கப்படும் இளைய வீரர்களை கொண்ட ஒரு அணிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. வீரர்கள் அனைவரும் இளையவர்கள் ஆனால் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் தான். இப்படியான ஒரு அணியாக வந்த அவுஸ்திரேலியா தான் T20 இறுதி போட்டி வரை தோல்வி இல்லாமல் வீறு நடை போட்ட அணி. அப்படி இருக்கையில் ஐ.பி.எல்லால் வளர்க்கப்பட்ட வீரர்கள் என்னத்தை பெரிதாய் கிழித்தனர் இப்படி சொதப்ப தான் ஐ.பி.எல் என்னும் களியாட்டமா?

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இதில் கார்த்திக்கின் விக்கெட் காப்பு படு மோசம் அப்படி இருந்தவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் விஜய் ஐ.பி.எல்லில் முதலில் பிரகாசித்தாலும் உலக கிண்ண போட்டியில் அவர் போட்ட மொக்கை எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் இது தேவையா? தினேஷ் கார்த்திக்கு பதில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ராபின் உத்தப்பாவை அனுப்பி இருக்கலாமே? நமன் ஒஜாவை எதற்காக பயன்படுத்தாமல் விட்டார்கள் என தெரியவில்லை. அந்த வீரருக்கு விஜயை தவிர்த்து வாய்ப்பு வழங்கி இருந்தால் சிலவேளை அவர் நம்பிக்கை அளித்திருக்கக்கூடும். கார்த்திக் சொதப்பிய நேரம் அவரை விட ஓஜா சிறப்பாகவே விக்கெட் காப்பும் செய்தார். விராத் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோர் ஓரளவு திருப்திப்படுத்தினர்.
அடுத்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சின்னப்பிள்ளை ஆட்டம் ஆடிய ரைனா. தன் பாட்டுக்கு துடுப்பாட்டத்தில் கலக்கிய அவருக்கு இந்த தொடர் எல்லாவகையிலும் கறுப்பாகிப்போனது. ஒரு தலைவருக்கு உரிய பண்புகள் இன்னும் அவருக்கு போதியளவு இல்லை என்பதுடன் கிரிக்கெட் விதிகளே தெரியாமல் ஒருவர் அணிக கப்டனாக ஆடிய அவமானமும் கிடைத்தது. அவ்வளவுக்கு அறிவில்லாமல் ஆடுகின்றாரா இவர்? ஆனால் இலங்கை தெரிவாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தெரிவாளர்கள் செய்தது ஒரு விதத்தில் நல்ல விடயம். இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு இப்போது ஓரளவுக்கு அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும். ரைனாவின் தலைமைப் பண்பின் வள்ளலும் விளங்கி இருக்கும். எனக்கென்னவோ இந்தியாவிற்கு பத்தொன்பது வயதுக்குட்பட்ட போட்டியில் உலக கிண்ணம் வென்று கொடுத்த கோலி பொருத்தமாக இருப்பார் என தோன்றுகின்றது. இப்போதைக்கு துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அவருக்கு தலைமைப் பொறுப்பு பெரிய சுமையாக இருக்காது என நம்புகின்றேன்.
அடுத்தவர் ஜடேயா, ஒருவேளை நம் இலங்கையில் சனத்தை வைத்திருப்பது போல இவரை வைத்திருக்க வேண்டும் என்ற மரியாதை இருக்கின்றதோ? கிரிக்கெட்டின் எல்லா துறையையும் மறந்து விட்டார். தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு முற்று முழுதாக அதை வீணாக்கி விட்டார். இனியும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரிவுக் குழுவும் தோனியும் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றார்கள் என்றே சொல்லலாம். கொஞ்ச காலத்துக்கு இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.
தன் பெயர் சொல்ல ஒரு வீரர் வேண்டும் என்பதற்காய் தோணி இவரை வளர்க்கின்றார் என நினைத்தாலும் இது அவர் பெயரை கெடுக்கும் பிள்ளையாய் இருக்கின்றது. இவரைவிட இன்னும் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சகலதுறை வீரர் தான் வேண்டும் என்கிறார் தோணி இந்த தொடரை பொருத்தவரை அஷ்வின் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை கொடுத்தால் அது பலனளிக்கும். மறு பக்கம் ரைனா,யூசுப்,யூவி என மற்ற வீரர்களையும் தோணி பயன்படுத்தலாமே. வரும் தொடர்களிலாவது சிந்திப்பாரா பார்ப்போம். ஐ.பி.எல்லில் சென்னைக்காய் அஷ்வினை நம்பியவர் நாட்டுக்காய் நம்பினால் எல்லோருக்கும் அது நல்லது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அஷ்வின் மட்டுமே ஆறுதல் ஆனால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பை வழங்கி அவர்களின் பலம் பலவீனத்தை தெரிவாளர்கள் அறிந்திருப்பர்.

கார்த்திக்,விஜய்,ரைனா,கோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான், ஜடேயா போன்றோர் சர்வதேசப்போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்களே. எனவே இந்தியாவின் இரண்டாம் தர அணி என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிம்பாவேயையும் இலங்கையையும் சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு நாடு சார்பாக அனுப்பப்பட்ட அணியே இது இதில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று சொல்ல முடியாது. அணி அணி தான் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்விதான். இது இலங்கைக்கும் பொருந்தும். தில்ஷான் தலைமையில் களம இறங்கிய இலங்கையும் இன்று சிம்பாவேயிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு காத்திருக்கின்றது. சங்கா,மகேல,முரளி,சனத் என முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவராக பிரகாசிக்காத தில்ஷான் தலைமையில் அணி அனுப்பப்பட்டது.
ஆரம்ப போட்டியில் தானே விக்கெட் காப்பாளராக ஆடிய தில்ஷான் தொடர்ந்து வந்த போட்டிகளில் சந்திமல் என்னும் அற்புதமான இளைய வீரர் ஒருவரை இனம்காண வைத்திருக்கின்றார். இலங்கையை பொறுத்தவரை தில்ஷான்,தரங்க, சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், கபுகேதர, குலசேகர,டில்ஹார போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர்கள் அப்படி இருக்கையில் இவர்களும் இரண்டாம் தர அணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இலங்கை தெரிவாளர்கள் ஒரு அற்புதமான தலைவரை தெரிவு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். தில்ஷான் ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்து டில்ஷானை தலைமைப்பொறுப்பில் வளர்க்க வேண்டிய எந்த ஒரு காரணமும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இல்லை. காரணம் சங்கா ஓய்வு பெற முன் தில்ஷான் போய்விடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைவர் என கருதப்பட்ட கபுகேதரவுக்கு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

மொத்தத்தில் இரண்டாம் தர அணி என்ற பெயரில் சென்ற இரண்டு அணிகளுக்கும் உண்மையில் அனுபவம் குன்றிய சிம்பாவே நல்ல பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் கூட்டு முயற்சிக்கும்,விளையாட்டின் மேல் உள்ள ஈடுபாட்டுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இரண்டு கிரிக்கெட் வல்லரசுகள் பங்கு பற்றிய தொடரில் அவர்களை தோற்கடித்து அவர்கள் இருவரையும் விட அதிக போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது சீறிப்பாயும் சிம்பாவே. டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த சிம்பாவேக்கு இது நிச்சயம் மிகப்பெரிய மருந்து. முதல் போட்டியில் சிம்பாவே வென்றபோது ஏதோ வென்றுவிட்டார்கள் என நினைத்தாலும். அந்த போட்டியில் சிம்பாவேயின் பலம் அபாரமாக வெளிப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்றாலும் அபார துடுப்பாட்ட உதவியுடன் ஓட்ட எண்ணிக்கையை துரத்தி மலைக்க வைத்தது. தொடரை பொறுத்தவரை சிம்பாவேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மிகப்பெரிய அரணாக இருந்து சிம்பாவேயின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். இருவரும் விக்கெட் விழுவதை தவிர்த்ததுடன் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மற்றவர்கள் வெற்றிகரமாய் அதை முடித்து வைத்தனர். மசகட்சா,டெயிலர் என்ற அந்த இரண்டு வீரர்களும் எல்லா வீரர்களையும் விட சிறப்பாக ஆடினார் என்றால் அது மிகை இல்லை.
இப்படி துடுப்பாட்டத்தில் எல்லோரும் கை கொடுக்க மறு புறம பந்து வீச்சாளர்களும் சில போட்டிகளில் அசத்தினர். அனுபவம் மற்றும் இளம் ரத்தம் வெறி என்பன சேர்ந்து சிம்பாவே கிரிக்கெட்டில் ஒரு மணி மகுடத்தை கொடுத்திருக்கின்றது. மற்ற இரண்டு அணிகளையும் விட சிம்பாவேயின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது உண்மை. பெருமளவான ஓட்ட எண்ணிக்கையை கடுப்படுத்தியது இந்த படை. இது மற்ற இரண்டு அணி வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது.
கத்துக்குட்டி அணி, இரண்டாம் தர அணி என விமர்சிக்கப்பட்ட அணி இப்போது தங்கள் விளையாட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் மற்ற இரண்டு அணிகளையும் விட கிண்ணம் வெல்ல சகல தகுதியும் இந்த அணிக்கு உண்டு. சிம்பாவே, நட்சத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒரு கிரிக்கெட் அணியாக பார்த்தால் அசுர வளர்ச்சியைக் காட்டும் சிக்கும்புராவின் இந்த புத்துப்படைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சொல்கின்றேன். இலங்கை,இந்திய ரசிகர்கள் கோபிக்கபடாது. இந்த முறை கிண்ணத்தை சிம்பாவே வெல்ல வேண்டும் அதுதான் அவர்களின் கடுமையான உழைப்புக்கும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டுக்கும் கிடைக்கும் பரிசு. சிங்க சீற ஆரம்பித்திருக்கிறது. மிக விரைவில் பல ராஜ்ஜியங்கள் விழும் என நம்புகின்றேன். மீண்டும் ஒருதடவை சிம்பாவே கிரிக்கெட்டுக்கு என் வாழ்த்துக்கள்.













