
2004 வந்த சுனாமி இலங்கை இந்தியா உட்பட சில நாடுகளை சின்னாபின்னமாக்கி விட்டு போன காயங்களே இன்னும் ஆறவில்லை அதற்குள் இயற்கை மீண்டும் கொந்தளித்து விட்டது. மனிதனே மனிதனை அழித்துக்கொண்டிருக்கும் இந்த நேரம் இயற்கைக்கும் பொறுக்கவில்லையோ? பொங்கி எழுந்து பொசுக்கிக்கொண்டிருக்கிறது.
இப்போது பசுபிக் கடலில் அமைந்துள்ள சமோவா தீவுகளில் சுனாமி அரக்கன் மீண்டும் கோரதாண்டவம் ஆடி இருக்கிறான். எட்டு ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வந்த சுனாமி வந்த வேகத்திலேயே எல்லாவற்றையும் அடித்து சென்று விட்டது. உடைமைகள் போனது ஒரு புறம் இருக்க எத்தனை உயிர்கள் என இன்னும் கணக்கிட முடியாமல் உடலங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இறைவன் மேல் ஆத்திரம் தான் வருகிறது. காரணம் சுனாமியை நானும் அனுபவித்தவன் அல்லவா. மிக அருகாமையில் இருந்து.
இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட சமோவா தீவின் பிரதமர், இங்கே இருந்த லெசா என்ற கிராமத்தை காணவே இல்லை. பல இடங்களில் வீடுகள் இருந்த சுவடுகளே இல்லை. சடலங்களை மட்டுமே நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது என சொல்கின்றார். சுனாமி தாக்கிய பத்து நிமிடங்களில் தீவின் வடிவே மாறி விட்டது. இந்த நேரத்தில் நேற்று மீண்டும் பூகம்பம் தாக்கியிருக்கின்றது இந்தோனேசியாவை. 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் இன்னும் பல சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
சோகங்கள் பல எங்களை சூழ்ந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சுனாமி அழிவு. மனது வலிக்கிறது. எங்கள் வீட்டில் இழவு விழுந்தது போல ஒரு உணர்வு. மனித இனம் ஒன்றில் தன்னை தானே அழிக்கும், இல்லை இயற்கைக்கு அடி பணிந்து விடும். எல்லாம் மாறி வசந்தம் எப்போதென தெரியாமல் வாழும் சாதாரணான மனிதனாக இறைவனை நம்புவதை விட வேறு வழி என்ன இருக்கின்றது. ஆண்டவா காப்பாற்று.













