
கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.
''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி
காவியக்கவிஞனே!
உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
மார்க்கண்டேயனே!
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.
மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
வாலி!
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்
எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்
உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!













